தமிழக செய்திகள்

முத்தையாபுரம், ஸ்பிக் நகர்பஜாரில் தேங்கும் மழை நீர் வடிந்து செல்ல நடவடிக்கை:மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

முத்தையாபுரம், ஸ்பிக் நகர் பஜாரில் தேங்கும் மழை நீர் வடிந்து செல்ல நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரம், ஸ்பிக்நகர் பஜாரில் தேங்கும் மழைநீர் வடிந்து செல்ல எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் மற்றும் ஸ்பிக் நகர் பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அதற்கு தீர்வு காணும் வகையில் அவசர கால நடவடிக்கை எடுக்க தெற்கு மண்டல அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டிருந்தார்.

அதற்கேற்ப முதல் கட்டமாக அந்தப் பகுதியில் ஊராட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களை மீண்டும் சீரமைத்து, மழைநீர் சாலையில் தேங்காமல் செல்ல ஏதுவாக வியாபாரிகள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேயர் ஆய்வு

இந்த பணிகளை மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரது நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் ராமச்சந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டியன், மாநகர கவுன்சிலர்கள் விஜயகுமார், சுயம்பு, ராஜதுரை, முத்துவேல், பச்சிராஜ், மற்றும் மேயர் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT