சென்னை,
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரையும், அவர்கள் வீட்டில் பணிபுரிந்த ஓட்டுனர் லால் கிருஷ்ணா மற்றும் ரவிராய் ஆகிய இருவரும் பணத்திற்காக கொலை செய்து அவர்களது உடலை புதைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்துவிட்டு பணத்துடன் தப்பி ஓட முயன்ற இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
கொலை செய்துவிட்டு தப்பிய வழிகள், கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் பூஞ்சேரியில் புதைத்த இடம் உள்ளிட்டவை குறித்து விசாரித்த பின், கொலையாளிகள் இரண்டு பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட கொலையாளி லால் கிருஷ்ணா, கடவுள் மீது அதீத பக்தி கொண்டவர் என்றும், சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. இதன்படி கடந்த வாரம் போலீசார் லால் கிருஷ்ணாவை காவலில் எடுத்து விசாரித்த போது, அவர் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.