தமிழக செய்திகள்

மயிலாப்பூர் இரட்டைக்கொலை வழக்கு: கொலையாளிகளுக்கு 5 நாள் நீதிமன்றக்காவல்

மயிலாப்பூர் இரட்டைக்கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு 5 நாள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த 7-ந்தேதி சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், அவனது கூட்டாளி ரவிராய் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறையினரால் ஆந்திர காவல்துறையினர் உதவியுடன் ஓங்கோலில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் குற்றவாளிகளிடம் இருந்து 1,127 பவுன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள கொலையாளிகள் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது கிருஷ்ணா,ரவிராய் இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி வழங்கியது. கோர்ட்டு அனுமதி கிடைத்தவுடன்,அவர்கள் இருவரையும் போலீசார் அழைத்து சென்றனர்.

போலீஸ் காவலில் அவர்களிடம் விசாரணை நடத்தும் போது, அவர்களின் வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT