மயிலாடுதுறை,
தமிழக சட்டமன்றதேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. பிரதான கட்சிகளான தி.மு.க. அ.தி.மு.க. தங்களது தலைமை யில் கூட்டணி அமைத்தும், த.வெ.க., நாம் தமிழர் கட்சிகள் தனித்தும் களம் கண்டன. இந்த தேர்தலில் வரலாறு காணாத வகையில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
நாளை (திங்கட்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு கடந்த 29-ம் தேதி வெளியானது. இதில் பெரும்பாலானவை தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஒரு சில கருத்துக்கணிப்புகள் அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றும் என்றும், ஒரே ஒரு கருத்துக்கணிப்பு த.வெ.க. ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த கருத்துக்கணிப்பு முடிவு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இதில் வேட்பாளர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். சட்டமன்ற தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற வேண்டி, காலசம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்மனை தரிசித்த அவர், பின்னர் கொடிமரம் அருகே தீபமேற்றி பிரார்த்தனை செய்தார்.