தமிழக செய்திகள்

சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது

போராட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னை,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெறது.

இந்த போராட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டம் நடத்தியவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க வந்தார்.

அப்போது, போராட்டக்காரர்களை சந்திக்க சீமானுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் சீமான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்களை கைது செய்த போலீசார், சீமானையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சீமான் சில மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.