சென்னை,
நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் (67 வயது) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினரான நாகை செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான எம். செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த செல்வராஜ் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார்.