நாகப்பட்டினம்,
நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னர் வடகிழக்கு பருவமழையால் அதே மாதத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் கப்பல் சேவையை தொடங்குவதற்கான தேதி 3 முறை மாற்றப்பட்டது. ஆனாலும் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கவில்லை.
இந்த நிலையில் இன்று அந்தக் கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் காலநிலை மாற்றங்களால் கப்பல் சேவையை இயக்க முடியவில்லை என்றும், விரைவில் புதிய பயண தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பது இருநாட்டு பயணிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.