நாகர்கோவில்,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சிலுவைக்கண். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீசர்பெர்ல் (வயது 8) என்ற மகன் இருந்தார். அங்குள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கிஷோர் சிலுவைக்கண் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கிஷோர் சிலுவைக்கண் மனைவியின் சொந்த ஊர் நாகர்கோவில் டி.வி.டி. காலனி பகுதி ஆகும். அங்கு அவருடைய பெற்றோர் தங்கியிருந்தனர். எனவே நெல்லையில் சில நாட்கள் தங்கிய அனைவரும் நாகர்கோவிலுக்கு வந்தனர். நேற்று முன்தினம் வீட்டில் சிறுவன் கீசன்பெர்ல் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிலில் இருந்து தவறி விழுந்துள்ளான். இதில் காயமடைந்த சிறுவன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்
சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிலில் இருந்து சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.