தமிழக செய்திகள்

நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மருதங்கோடு மடத்துவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 46), தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது அத்துமீறி நுழைந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ரெஜியை குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தர காரணமாக இருந்த போலீசார் மற்றும் அரசு வக்கீல் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பாராட்டினார்.