திருப்பூர்,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
அரிய சாதனைகள் எப்போதும் எளிய பின்னணியில் இருந்தே தொடங்குகின்றன என்பதை திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளனர். நடப்பு நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தங்களது மருத்துவக் கனவை நனவாக்கியுள்ள இந்த இளம் சாதனையாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, "முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு இலக்கணமாகத் திகழும் இம்மாணவர்களில் 9 பேர், முதல் முயற்சியில் ஏற்பட்ட சறுக்கல்களால் சோர்ந்து போகாமல், விடாமுயற்சியுடன் மறுமுறைத் தேர்வு (Repeaters) எழுதி சாதித்துள்ளனர். இம்மாணவர்களோடு சேர்ந்து அவர்களின் மருத்துவக் கனவுக்கு தோள் கொடுத்த அன்புப் பெற்றோர்களுக்கும், அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணி ஒருவரது கனவுகளுக்குத் தடையல்ல என்பதை இம்மாணவர்களின் வெற்றி நிரூபித்துள்ளது. தங்களது உழைப்பால் உயர்ந்து, எதிர்காலத்தில் ஏழை, எளிய மக்களுக்குச் சேவை செய்யும் சிறந்த மருத்துவர்களாக உருவாக இவர்களை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.