சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பாரதப் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமிக்கு கடும் கண்டனம்.
சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுச்சாமி நமது நாட்டின் பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாகவும், அரசியல் நாகரிகமற்ற முறையிலும் இழிவாக பேசியிருப்பதை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்திய மக்களின் ஆதரவோடு, தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று, தனது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உலக அரங்கில் இந்தியாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றவர் நமது பாரத பிரதமர்.அத்தகைய பிரதமர் மோடி பற்றி ஒருமையில் பேசுவதும், தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதும் காங்கிரஸ் கட்சியின் விரக்தியையும், அவர்களின் மலிவான அரசியல் கலாச்சாரத்தையுமே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே திருச்சி வேலுச்சாமி தனது அநாகரிகமான பேச்சுக்கு உடனடியாக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.நமது பாரத பிரதமருக்கு எதிராக தொடர்ந்து இதுபோன்ற அவதூறுகளை பரப்புவதை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் ஒருபோதும் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். ஜனநாயக ரீதியில் இதற்கான கடுமையான பதிலடியை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.