நாமக்கல்,
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் நிறுவனரும், சமூக
ஆர்வலருமான காந்தியவாதி ரமேஷ் (43), மிகவும் நூதனமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான ரமேஷ், அவரை போலவே வேட்டி மட்டும் அணிந்து, கையில் தடியுடன் நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு ஒரு மிதி வண்டியில் வந்து இறங்கிய ரமேஷ் அங்கிருந்து வெறும் கால்களுடன் நடந்து சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது தலையில் கேமிரா மற்றும் கையில் ஒரு பொம்மை துப்பாக்கியையும் ஏந்தி தனது கோரிக்கையை வலியுறுத்த வந்திருந்தார்.
தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை பதிவு செய்யவும், தேர்தலின் வெளிப்படை தன்மையை கொண்டு வரவும் தான் இவ்வாறு வந்ததாக அவர் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார்.
இந்த தேர்தலில் தான் வெற்றி பெற்றால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு இலவசமாக கை துப்பாக்கி வழங்கப்படும் என்ற அதிரடியான மற்றும் விசித்திரமான வாக்குறுதியை அளித்தார்.