தமிழக செய்திகள்

நாங்குநேரி இரட்டைக்கொலை: சமூக வலைதளங்களில் பதிவு; 11 வழக்குப்பதிவு, 2 பேர் கைது

சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும், பொது அமைதி, சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் பதிவுகள் வெளியிடப்பட்ட குற்றத்திற்காக, மாவட்டம் முழுவதும் இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்சொன்ன வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளனர். வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலான மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடும் நபர்களை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ண குமார், இவ்வாறான சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிந்து கைது செய்ய நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது பொறுப்புடன் செயல்பட்டு, வன்முறையை தூண்டும் அல்லது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலான பதிவுகளை பகிர்வதையோ, பரப்புவதையோ தவிர்க்குமாறு மாவட்ட காவல்துறை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.