சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி பகுதியில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே 10 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கப்பெற்று கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் என தினமும் ஏராளமானோர் வந்து பார்வையிட்டும், 'செல்பி' எடுத்தும் மகிழ்கின்றனர். இதேபோல் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்திலேயே திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தை தினமும் பொதுமக்கள். சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள், வெளிநாட்டினர் என பார்வையிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, 11-ம் கட்ட அகழாய்வு பணிகள் திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே 2 குழிகள் தோண்டி பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் தலைமையில் தொல்லியல் துறை மாணவர்கள், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கீழடி11ம் கட்ட அகழாய்வில் மிகச்சிறிய வித்தியாசமான வடிவிலான குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை கீழடியில் இது போன்ற பானை கண்டெடுக்கப்பட்டதில்லை. கெண்டி மூக்கு பானை, சிவப்பு நிற முடியுடன் கூடிய பானை என அடுத்தடுத்த அகழாய்வில் கிடைத்தாலும் தற்போது கிடைத்த பானை அதில் இருந்து புதிய வடிவத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.