மதுரை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கி ழமை) நடக்கிறது. இந்தநிலையில் மதுரை வலையங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மத்திய மந்திரி பியூஸ் கோயல், பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்கு எண்ணும் மையங்களில் பணி யில் உள்ள முகவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் தென் மாவட்டத்தில் உள்ள 17 தொகுதிகளை சேர்ந்த பா.ஜனதா வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை தலைமை முகவர்கள், அனைத்து வாக்கு எண் ணிக்கை முகவர்கள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணும் முக வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பியூஸ் கோயல் கூறியதாவது:-
தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கக்கூடிய, தமிழ் மக்களின் பெருமை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கக்கூடிய, பெண்களின் நலன் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யக்கூடிய ஒரு அரசாங்கம் அமையும். இந்த வெற்றியில் எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பாளர்கள், அவர்கள் தங்களது வேலையைச் செய்கின்றனர். நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். ஒட்டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குடும்பமும் மிகச்சிறந்த பிரச்சாரத்தை மேற்கொண்டது. நாம் ஒரு வசதியான பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்போம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், நான் டெல்லியிலிருந்து இவ்வளவு தொலைவு வந்திருக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.