தமிழக செய்திகள்

சிதம்பரம் அருகே உள்வாங்கிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் - மக்கள் அதிர்ச்சி

பாலம் தொடர்ந்து உள்வாங்கி வருவதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடலூர்,

விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. இந்த சாலையை தினமும் பல வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே எடுக்கன்காட்டுப்படுகை அடுத்த கொள்ளிடம் ஆற்றுக்கு முன்பாக மேம்பாலம் சுமார் 20 அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. நள்ளிரவில் பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை பார்த்த தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள மக்களை உடனடியாக காலி செய்யும்படி கூறினர். பாலத்தின் அருகே 25 குடும்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாலம் தொடர்ந்து உள்வாங்கி வருவதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தரம் இல்லாமல் அவசர அவசரமாக அமைக்கப்பட்ட பாலம் என்பதால் தொடர்ந்து சேதம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.