சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தேசிய அளவில் கலக்கும் தென்காசியின் சிங்கப் பெண்கள்!
தென்காசி மாவட்டத்தில் உள்ள காளத்தி மடம் என்ற குக்கிராமத்தில், கூலித் தொழில் செய்யும் தகப்பன்மார்களுக்கும், பீடி சுற்றும் தாய்மார்களுக்கும் பிறந்த பெண் குழந்தைகள், தங்களின் அசாத்திய திறமையால் “கபடி” விளையாட்டில் இன்று ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். “இளம்புயல்” என்ற ஸ்போர்ட்ஸ் கிளப்பின் மூலம், பெண்களுக்கான கபடி உலகில் கலக்கி வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லை என்றாலும், நவீன பயிற்சி கருவிகளை வாங்க முடியவில்லை என்றாலும், சத்தான உணவு முறைகளை பின்பற்ற முடியவில்லை என்றாலும், “தன்னம்பிக்கை” மற்றும் “கடின உழைப்பு” ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு, இதுவரை 100-க்கும் மேற்பட்ட கோப்பைகளை வென்றிருக்கிறது “இளம்புயல்” ஸ்போர்ட்ஸ் கிளப். இந்த ஸ்போர்ட்ஸ் கிளப் கீழ் விளையாடுபவர்கள் அனைவரும், 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் என்பது கூடுதல் சிறப்பு.
தமிழகத்தின் பெருமையான அடையாளமாகவும், இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் தென்காசியின் “இளம்புயல்”களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், தாங்கள் கற்றுக் கொண்டவற்றை ஆத்மார்த்தமாக அடுத்த தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் “இளம்புயல்” பயிற்சியாளர்களான, முன்னாள் கபடி வீரர்கள் சௌந்தர் மற்றும் அர்ஜுனன் ஆகியோருக்கும் எனது பாராட்டுக்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.