தமிழக செய்திகள்

தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 1.02 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு - பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.982.18 கோடி இழப்பீடு

மோட்டார் வாகன விபத்து வழக்குகள், செக் மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் என்று பலதரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தேசிய அளவில் நேற்று லோக் அதாலத் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தேசிய லோக் அதாலத்தை தமிழ்நாடு மாநில சட்டப் பணி ஆணைக் குழு நடத்தியது.

இந்த லோக் அதாலத், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி வழிகாட்டுதலின் பேரிலும், மாநில சட்டப்பணி ஆணைக்குழு நிர்வாகத் தலைவரும், ஐகோர்ட்டு மூத்த நீதிபதியுமான எஸ்.எம். சுப்பிரமணியம் மேற்பார்வையிலும் நடந்தது.

சென்னை ஐகோர்ட்டில், நீதிபதிகள் பி.பி.பாலாஜி, கே.ராஜசேகர், ஜி.அருள்முருகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதிகள் எம்.டி.சுமதி,

என். குணசேகரன், மாவட்ட அளவில் நீதிபதிகள், சார் நீதிபதிகள், மாஜிஸ்தி ரேட் டுகள் தலைமையில் மொத்தம் 524 அமர்வுகள், வழக்குகளை விசாரித்தன.

மோட்டார் வாகன விபத்து வழக்குகள், செக் மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் என்று பலதரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வழக்கில் தொடர்புடைய இருதரப்பினர்களிடம் நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது முழு சம்மதத்துடன் வழக்குகளை சமரசத்துக்கு கொண்டு வந்து முடித்து வைத்தனர்.

இதில், இருதரப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் முழு சம்மதத்துடன், 1.02 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.982.18 கோடி இழப்பீடு கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT