தமிழக செய்திகள்

தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 91 ஆயிரம் வழக்குகளில் தீர்வு- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664 கோடி கிடைத்தது

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர தேசிய அளவில் ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர தேசிய அளவில் ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் லோக் அதாலத் நேற்று நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு இந்த தேசிய லோக் அதாலத்தை நடத்தியது. இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி வழிகாட்டுதலின்படி தேசிய லோக் அதாலத் நடந்தது. சென்னை ஐகோர்ட்டில், நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.டி.ஆஷா, என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையில் 5 அமர்வுகள் உள்பட 506 அமர்வுகள் அமைக்கப்பட்டன.

91 ஆயிரத்து 369 வழக்குகள் சமரசம்:

இந்த அமர்வுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள், மின்வாரியம் தொடர்பான வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் என்று பல்வேறு வகையான வழக்குகளை விசாரித்தது. இதில், இருதரப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் முழு சம்மதத்துடன், 91 ஆயிரத்து 369 வழக்குகள் சமரசத்துக்கு வந்தன. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664 கோடியே 47 லட்சத்து 21 ஆயிரத்து 308 கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT