கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தேசிய விளையாட்டு நாள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

விளையாடுபவர்கள் அனைவருக்கும் விளையாட்டு மன அமைதியைக் கொடுக்கிறது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாள் (ஆகஸ்ட் 29) ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு, விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

விளையாட்டு என்பது ஒருவருக்கு வெற்றியையோ, தோல்வியையோ தருவதில்லை. மாறாக, விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது; உடல் வலிமையை உறுதிப்படுத்துகிறது; மகிழ்வான பொழுதுகளை வழங்குகிறது; போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீங்கான வழிகளிலிருந்து பாதுகாக்கிறது; இறுதியாக, ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்குத் தொடர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர். தியான் சந்த் பிறந்தநாள், தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டைப் போற்றுவோம்.

தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விளையாட்டைச் சென்றடையச் செய்வதும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதுமே தமிழ்நாடு அரசின் முதன்மை நோக்கமாகும்; இதற்காக 8-18 திட்டம், 10 ஒலிம்பிக் சிறப்புப் பயிற்சி மையங்கள், வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவித்துள்ளோம்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம். அனைவருக்கும் தேசிய விளையாட்டு நாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.