சென்னை,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், 3,085 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரப்பதிவு தடை விதித்திருப்பதை நீக்கி அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கு எதிராக ரமேஷ் என்பவர் உண்மைகளை மறைத்து, இனாம் நிலங்களை கோவில் நிலம் என்று தெரிவித்ததோடு, ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் என கற்பனையான மதிப்பை குறிப்பிட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்த நிலங்களை தமிழ்நாடு அரசு தாரை வார்த்து இருப்பதாக தவறாக ஒரு பதிவு செய்துள்ளார்.
அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல், பா. ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதை வழிமொழிந்து அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழ்நாட்டில் இனாம் நில பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 30 லட்சம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவரின் தவறான அறிக்கையை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும்.
இனாம் நில விவசாயிகள் பொதுமக்களின் நில உரிமைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படி இனாம் நிலங்களை கோவில் நிலம் என்று நிரூபித்தால் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் கோடி பரிசு வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது அவருடன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட தலைவர் ரமேஷ், பல்லடம் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், நடராஜ், பல்லடம் நகர செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.