தமிழக செய்திகள்

கோபி அருகே கற்களை கடத்த முயன்ற லாரி பறிமுதல்

கோபி அருகே கற்களை கடத்த முயன்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தூர்

கோபி அருகே உள்ள எலத்தூர் பகுதியில் ஈரோடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் லட்சுமி ராம் பிரசாத் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்கள் ஏற்றப்படுவதை கண்டனர். உடனே அவர்கள் லாரியை நோக்கி சென்றனர். அதிகாரிகளை கண்டதும் லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

உடனே லாரியை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின் போது லாரியில் 4 யூனிட் கற்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டனர். கற்களை லாரியில் ஏற்றி கடத்த முயன்றது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT