தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு ஏ.சண்முகபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி. கடந்த 9-ந் தேதி இவர் சோரீஸ்புரம் ரோட்டில் டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது, மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அய்யனடைப்பு கணபதி நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராமர் (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் ராமரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.