தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மாயமானார். அவரை சக மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விசைப்படகு
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்த தனுஷ்மதி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், ஆறுமுகநேரி இலங்கத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (வயது 36), மற்றும் படகு ஓட்டுநரான தருவை குளத்தைச் சேர்ந்த டைசன், அதே ஊரைச் சேர்ந்த ரோஷன், மைக்கேல், ராஜூ, வெள்ளப்பெட்டியைச் சேர்ந்த மணி, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த அஜய், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியைச் சேர்ந்த சேது உட்பட 9 மீனவர்கள் கடந்த 31-ந் தேதி அதிகாலையில் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தங்குகடல் மீன்பிடித்தலுக்காக சென்றனர்.
தேடும் பணி
அவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அவர்கள் அதிகாலை 4 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகில் இருந்த ராஜ்குமார் தவறி கடலுக்குள் விழுந்து காணாமல் போய்விட்டாராம். உடனடியாக சக மீனவர்கள், அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மற்ற மீனவர்களுடன் சேர்ந்து கடலில் விழுந்த ராஜ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.