தமிழக செய்திகள்

புதிய தலைமைச் செயலகத்தை தடைசெய்ய முடியாத அளவுக்கு சட்டம் உருவாக்க வேண்டும் - பிரேமலதா யோசனை

அறிவிப்புகள் எல்லாம் ஆக்கப்பூர்வமாக விரைவில் செயல் வடிவம் பெற வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் விஜய், முன்மொழிந்த அரசினர் தீர்மானத்தையும், பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளையும் ஆதரித்து தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் விஜய், பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் மிகச் சிறப்பாக, வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. அந்த அறிவிப்புகள் எல்லாம் ஆக்கப்பூர்வமாக வெகு விரைவில் செயல் வடிவம் பெற வேண்டும்.

தமிழ்நாடு, தமிழ்மொழிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்று எத்தனை குழந்தைகள் தமிழ் வாசிக்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பலருக்கு தமிழ் வாசிக்கவும், பேசவும் தெரியவில்லை. தமிழ்மொழி தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான இடத்தை பெறவேண்டும். பள்ளிகளில் இருந்து அதை கொண்டு வரவேண்டும்.

முதல்-அமைச்சர் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். வரவேற்கத்தக்கது. கலைஞர் ரூ.1,500 கோடியில் தலைமைச் செயலகத்தை உருவாக்கினார். ஆனால் ஜெயலலிதா அதை ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றினார். அப்படி மாற்றவில்லையென்றால் அங்குதான் தலைமை செயலகம் இருந்திருக்கும்.

ஆகவே முதல்-அமைச்சர் எந்த ஆட்சி வந்தாலும், போனாலும் நீங்கள் உருவாக்கும் புதிய தலைமைச் செயலகத்தை தடை செய்யவே முடியாத அளவுக்கு சட்டத்தை உருவாக்கி அதற்கான பணிகளை தொடங்க வேண்டும். தமிழ்நாடு பாரம்பரியத்தை பறைசாற்றும் கட்டிடமாக அந்த கட்டிடம் இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT