நெல்லை,
பெண்கள், சிறுவர்-சிறுமியர்கள் ஆர்வமுடன் சேகரிக் கும் வேப்பமுத்துகளை வியாபாரிகள் நல்ல விலைக்கு கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
மருத்துவ குணம் வாய்ந்த வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு மிகுந்த பயன்களைத் தருகின்றன. தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் வேப்ப மரங்கள் உள்ளன. தற்போது வேப்ப மரங்களில் இருந்து விழும் பழங்களை சேகரித்து, அவற்றின் விதைகளான வேப்பமுத்துகளை மட்டும் பிதுக்கி காயவைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் பெரும்பாலான பெண்கள், சிறுவர்-சிறுமிகள் ஓய்வு நேரங்களில் வேப்பமுத்துகளை சேகரித்து விற்பனை செய்கின்றனர். ஒருகிலோ வேப்பமுத்துகளை ரூ.65-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அவற்றை வியாபாரிகள் இட்டமொழியில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.
இங்கிருந்து நெல்லை, கோவில்பட்டி பகுதிகளுக்கு மூட்டைகளில் வேப்ப முத்துகளை அனுப்பி வைக்கின்றனர். அவற்றை கன்டெய்னர்களில் ஏற்றி தூத்துக்குடி துறைமுகம் வழியாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
வேப்பமுத்துகளை வாங்கும் தனியார் நிறுவனங்கள் அவற்றை உடைத்து, தோடுகளை அகற்றி, பருப்புகளை எந்திரத்தில் பிழிந்து எண்ணெய் தயாரிக்கின்றனர். வேப்ப எண்ணெயை மருந்து நிறுவனங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால் அவற்றின் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது வேப்பமுத்து சீசன் தொடங்கியுள்ளது. இட்டமொழியில் இருந்து தினமும் சுமார் 100 வியாபாரிகள் பல்வேறு ஊர்களுக்கும் சென்று வேப்பமுத்துகளை விலைக்கு வாங்கி வருகின்றனர். அந்தந்த ஊர்களில் வயதான மூதாட்டிகள், பெண்கள் பெரும்பாலும் வேப்பமுத்துகளை சேகரிக்கின்றனர். பள்ளி மாணவ-மாணவிகளும் விடுமுறை நாட்களில் வேப்பமுத்துகளை சேகரிக்கின்றனர்.
தற்போது வேப்பமுத்துகளை வெளிநாடுகளில் மருந்து நிறுவனங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்கின்றன. இதனால் வேப்பமுத்துகளை சேகரிப்பவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. வேப்பமுத்துகளை ஆர்வ முடம் அதிகளவில் சேகரிக்கும் சிலர் நேரடியாகவே இங்கு அவற்றைக் கொண்டு வந்தும் விற்கின்றனர்.
இங்கிருந்து நெல்லை, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள குடோனுக்கு கொண்டு சென்று பக்குவப்படுத்தி, கன்டெய்னர்களில் ஏற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
அவற்றை மருந்து நிறுவனங்கள் வாங்கி, அதன் மூலம் பல்வேறு மருத்துவ பொருட்களை தயாரிக்கின்றனர். அழகுசாதன பொருட்கள் தயாரிக்கவும், இயற்கை பூச்சிவிரட்டி, உரம் தயாரிப்பது போன்ற இயற்கை வேளாண் விவசாயத்துக்கும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.