தமிழக செய்திகள்

நாளை மறுநாள் நீட் மறுதேர்வு: மாணவர்கள் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனை பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், டாக்டர்கள் மூலம் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை,

இந்தியா முழுவதும் மே.3ஆம் தேதி நீட் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருந்த நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

நீட் மறு தேர்வு

இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியது. இந்த நிலையில் வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீட் மறுதேர்வு

2026-27 கல்வியாண்டுக்கான நீட் மறுதேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

டெலி கவுன்சிலிங்

'டெலி கவுன்சிலிங்' பெறுவதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை பெற்று கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், டாக்டர்கள் மூலம் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.