நெல்லை,
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சி பகுதியைச் சேர்ந்த துரைச்சி, கிஷோர், சிவகாமி ஆகியோர் காரில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.
காவல்கிணறு பகுதியை அடுத்து வெள்ளமடம் பைபாஸ் சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த துரைச்சி, கிஷோர், சிவகாமி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரல்வாய்மொழி போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.