நெல்லை,
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 40). இவர் கடந்த 2-ந் தேதி மாலையில் தனது மகன்கள் சின்னதுரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்புரத்தில் இருந்து மூலச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
மாதுடையார்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காரில் மர்ம கும்பல் பின்தொடர்ந்தனர். காரால், காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். அதில் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். காளிமுத்து, சின்னதுரை ஆகியோர் படுகாயமடைந்தனர். அந்த கும்பல் காளிமுத்துவின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது.
இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மகேஷ் (29), குமார் என்ற கொக்கி குமார் (23), ஊர் காடு பகுதியை சேர்ந்த முத்துச்செல்வன் (29) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து நேற்று மூலச்சி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (30), ராஜதுரை (30), முத்துபட்டன் என்ற பட்டு ராஜா (20) மற்றும் மகாலிங்கம் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பலரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இரட்டைக் கொலை வழக்கில் மூலச்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (29) என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். போலீசாரை பார்த்து தப்பியோடிய கிருஷ்ணன் கீழே தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இரட்டைக் கொலை வழக்கில் இதுரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.