தமிழக செய்திகள்

நெல்லை: தொடர் மழையால் 100 அடியை எட்டிய பாபநாசம் அணை

156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 114.17 அடியாக உள்ளது.

நெல்லை,

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர் மட்டம் மளமளவென்று உயர்ந்தது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் காரையாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 98.50 அடியாக இருந்தது. நேற்று மேலும் 1.70 அடி உயர்ந்து 100.20 அடியாக இருந்தது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,266 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு நீர் திறப்பு 805 கன அடியாக உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 114.17 அடியாக உள்ளது. 118 அடி உய ரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.68 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 345 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 50 கன அடியும், பெரிய கால்வாயில் 45 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக திருக்குறுங்குடி பகுதியில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் திருக்குறுங்குடியில் உள்ள பெரிய குளம் நேற்று நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த குளத்தின் மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கால்வாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.