திருநெல்வேலி,
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில், திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து சங்கர்நகரில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன் விழா மேல்நிலைப்பள்ளி மாணவர் வினேயஸ் ச.ஹோல்லா 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் 3-ம் இடமும், திருநெல்வேலி மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அந்த மாணவரின் சாதனையை பாராட்டும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார், மாணவரை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, புத்தகம் பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும் கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்கி, உயர்ந்த இலக்குகளை அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் உஷாராமன், பள்ளியின் முதுகலை தமிழாசிரியர், கவிஞர் கணபதி சுப்பிரமணியன், மாணவரின் தாயார் வீனா ஹோல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.