நெல்லை,
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றபோது மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பணகுடியை அடுத்த காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஏஞ்சல் (வயது 60). தனியாக வசித்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலையில் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று மேரி ஏஞ்சலின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து மேரி ஏஞ்சல் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரது மகன் விக்னேஷ் (25) என்பவர் இந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்த தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.