தமிழக செய்திகள்

நேபாள பெருவெள்ளம்: டெல்லி உதவி மைய கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் குழு ஆய்வு

தமிழக அமைச்சர்கள் குழுவினர் நேற்று டெல்லி சென்றனர்.

சென்னை,

நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற மொத்தம் 85 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே, மீட்புப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.

இந்த நிலையில், நேபாள பேரிடரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உதவி மையத்தின் செயல்பாடுகள், பெறப்படும் அழைப்புகள், தகவல் சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர். தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தான் நேபாளம் சென்றிருப்பார்கள் என்று நினைத்தோம். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 26 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிலரை கண்டறிய முடியவில்லை. மத்திய அரசு, நேபாள அரசுடன் பேசி அவர்களுக்கான உதவிகளை செய்வோம். விரைவில் அவர்களை மீட்டு வருவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம்’ என்றார்.