சென்னை,
குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான் என டிராவல்ஸ் உரிமையாளர் கூறியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டை ராதா நகர் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனம் சார்பில் கடந்த 14ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து 49 பேர் நேபாளம் வழியாக சீன எல்லையில் உள்ள கைலாஷ் யாத்திரைக்குப்புறப்பட்டுச் சென்றனர்.
சுற்றுலா நிறுவன உரிமையாளரின் மகன் சத்ய நாராயணன் தலைமையில் சென்ற இந்த குழுவில் சிங்கப்பெருமாள் கோவில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (28) என்ற வாலிபரும் சென்றுள்ளார். மேலும் குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார் பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை,
கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த பயணத்தில் இடம்பெற்றுள்ளனர்.
சுமார் 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றுமுன்தினம் சென்னை திரும்ப வேண்டிய நிலையில் நேபாள சீன எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் நடைமுறைகளை மேற்கொண்டிருந்த போது எதிர் பாராதவிதமாக சக்திவாய்ந்த காட்டாற்று வெள்ளத்தால் அந்த குடியேற்ற அலுவலக கட்டிடமே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேபாளத்திற்கு சென்று வந்த சென்னை குரோம்பேட்டை டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான். மலை மேல் ஓடியவர்கள் ஒரு சிலர் தப்பியிருக்கலாம். சீன பகுதிக்குள் ஓடியுள்ளனர். அந்த பகுதி முழுவதும் 6 அடி உயர சேற்றால் மூடப்பட்டுள்ளது. எங்கள் 3 குழுவும் இதில் சிக்கி உள்ளனர்.
வெள்ள பாதிப்பு குறித்து நேபாள அரசின் தகவல் மட்டுமே கிடைக்கிறது. சீன அரசு மூலம் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர் என்றார்.