தமிழக செய்திகள்

தென்கிழக்கு அரபிக்கடலில் 14-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 14-ந் தேதி (நாளை மறுதினம்) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக அன்றைய தினம் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும், கத்தரி வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

கனமழை பெய்யக்கூடும்

அதன்படி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் (புதன்கிழமை), வியாழக்கிழமை (நாளையும்) மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, வருகிற 14-ந் தேதி (நாளை மறுதினம்) தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், இதன் காரணமாக நாளை மறுதினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சூறாவளி காற்று

அதேபோல், 15-ந் தேதி (சனிக்கிழமை) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் இன்றும், நாளையும் அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்திலும், 14 மற்றும் 15-ந் தேதிகளில் 50 முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்