தமிழக செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களே உண்மைக் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த 11 பேரில் திருவேங்கடமும் ஒருவர். இந்த நிலையில் போலீசார் இவரிடம் விசாரணை நடத்த இன்று காலை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்து சென்றனர். அப்போது, திருவேங்கடம் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இதனால் திருவேங்கடத்தை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் இரண்டு முறை சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கவுண்டர் செய்யப்பட்டதில், திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி சாய்க்கும் பரபரப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கைதானவர்களே உண்மைக் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் இந்த சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். கொலை செய்தவர்களின் அடையாளங்களை குறிப்பிட்டு போலீசார் இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.