தமிழக செய்திகள்

மரபணு ஆய்வில் புதிய தகவல்: கீழடி மக்கள் அதிகளவு இறைச்சி உண்டனர்!

கீழடியில் வாழ்ந்த மக்கள் அதிகளவு இறைச்சி சாப்பிட்டது, மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிவகங்கை,

கீழடியில், 2014 முதல் அகழாய்வு நடந்து வந்தாலும், 2021ல் கொந்தகையில் அகழாய்வு தொடங்கிய பின், மதுரை காமராஜர் பல்கலை மரபணு பிரிவும் இதில் இணைந்தது. கொந்தகையில், 137 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. அத்துடன் மக்களின் எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன. அவற்றை, மதுரை காமராஜர் பல்கலை மரபணு பிரிவு தலைவர் குமரேசன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

மரபணுத்துறை ஆய்வு

சமதளம் மற்றும் தாழிகளில் இருந்த எலும்பு திசுக்கள், தாழிகளின் பக்க சுவர்களில் இருந்த கொழுப்புகள், பற்களில் இருந்த 'பாக்டீரியாக்கள்' உள்ளிட்டவற்றை பகுப்பாய்விற்காக எடுத்து சென்றனர். அதில், பண்டைய கால மக்களின் உணவு பழக்கங்களை கண்டறியும் பணி நடந்தது.

மதுரை காமராஜர் பல்கலை மரபணுத்துறை தலைவர் குமரேசன் கூறியதாவது:-

கீழடி கொந்தகை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய தளங்களில் இருந்து, 75,000 மரபணு குறியீடுகளை வைத்து ஆய்வு மேற்கொண்டோம். இதில், கொந்தகையில் கி.மு.,600, சிவகளையில் கி.மு., 3,300, ஆதிச்சநல்லுாரில் கி.மு., 1,000 ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்த மக்களின் மரபணு அமைப்பிற்கும், தற்போதைய தமிழக மக்கள், தென்கிழக்கு ஆசிய மக்கள், இலங்கை மக்களின் மரபணு அமைப்பிற்கும் தொடர்புள்ளன.

இறைச்சி உண்டனர்

தாழிகளில், கொழுப்பு அதிகளவு படிந்துள்ளதால் கீழடி மக்கள் இறைச்சியை அதிகம் சாப்பிட்டிருக்க கூடும். மரபணு ஆய்வில் பால், தினை, அரிசி, தேங்காய் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. கீழடி மக்கள் வளர்த்த கால்நடைகள், அவற்றின் நகர்வுகளை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.