தமிழக செய்திகள்

திரைப்பட தணிக்கை சான்றிதழுக்கான புதிய வழிகாட்டுதல்கள் - வானதி சீனிவாசன் வரவேற்பு

குடும்பத்துடன் அமர்ந்து காணும் வகையில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை தணிக்கை வாரியம் உறுதி செய்துள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், போதைப்பொருள் தடுப்பு எச்சரிக்கை மற்றும் வயது சார்ந்த புதிய UA (7+, 13+, 16+) சான்றிதழ் பிரிவுகள் உட்பட, வன்முறை, ஆபாசம் மற்றும் சமூக விரோத காட்சிகளைத் தவிர்க்கும் வகையிலான புதிய திரைப்படச் சான்றிதழ் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதை முன்னாள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய உறுப்பினர் என்ற வகையில் வரவேற்கிறேன்.

ஆயிரம் கூட்டங்கள் போட்டு சொல்லும் ஒரு கருத்தை இரண்டரை மணி நேர சினிமா பல லட்சக்கணக்கான மக்களுக்கு மனதில் ஆழமாக பதிய வைத்துவிடும் என்பதாலேயே எப்போதும் வெகுஜன ஊடகங்களுக்கு கருத்துரிமையைக் கூறும் சுதந்திரம் அதிகம். ஆனால் சமீப காலங்களாக முரண்பாடான கருத்துக்களும், ஆபாசங்கள் நிறைந்த காட்சிகளும், வன்முறையைத் தூண்டும் வகையில் இறையான்மைக்கு எதிரான பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருவது சமுதாய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே இதனை தவிர்க்கும் நோக்கிலும், தரமான நல்ல படைப்புகள் வர வேண்டும் என்ற நோக்கிலும் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தரமான நல்ல கருத்துள்ள, குடும்பத்துடன் அமர்ந்து காணும் வகையில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை உறுதி செய்துள்ளது.

இதுமட்டுமன்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் வீடியோக்கள், குறும்படங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவும், விதிகளை மீறி உருவாக்கப்படும் ஐடிகளை நீக்கம் செய்தும் அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். கருத்து சுதந்திரம் என்பது சமூகத்தின் மீதான பொறுப்புடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். பொழுதுபோக்கையும், உத்வேகத்தையும் அளித்து, சமூகத்திற்கு நேர்மறையாகப் பங்களிக்கும் சினிமா மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை நாம் ஊக்குவிப்போம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT