சென்னை,
தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களில் 105 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் 19,710 குடும்பங்களைச் சார்ந்த 56,638 நபர்கள் வசித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ள 77 இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக 10,469 புதிய வீடுகள் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் நிதி உதவி உடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கட்டப்பட்டு வருகிறது.
இதில், 24 மாவட்டங்களில் உள்ள 52 இலங்கைத் தமிழர் முகாம்களில் 6,010 புதிய வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது 17 மாவட்டங்களில் உள்ள 30 முகாம்களில் கட்டப்பட்டுவரும் 4,459 வீடுகளின் கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு முன்னிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், முகாம் பதிவு விவரங்களில் இடம்பெறாத இலங்கை தமிழர்களை முகாம் பதிவுகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும்,
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீட்டு கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து, வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு விரைவில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யுமாறும் துறை அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.