தமிழக செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்: சிபிஎம் கடும் எதிர்ப்பு

தமிழக அரசின் புதிய தலைமைச்செயலக கட்டிடம் சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட இருக்கிறது.

சென்னை:

சென்னையை அடுத்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக வெளியிட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது: - தற்போதைய தலைமைச் செயலகத்தில் கடுமையான இட நெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் நிலவி வருவது உண்மைதான். இருப்பினும், நீண்டகாலக் கட்டுமானம் என்பதால், இதுபோன்ற விவகாரங்களில் அரசு அவசர கதியில் எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது. பட்டினப்பாக்கம் பகுதியைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்கள், புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. அவர்களின் குரலுக்கும் அரசு செவி சாய்க்க வேண்டும்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதிய தலைமைச் செயலகத்தை சென்னையை விட்டு மிகத் தொலைவில் அமைப்பதும் பொருத்தமாக இருக்காது. எனவே, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை அறிந்து ஒருமித்த முடிவை எட்டுவதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஒருமித்த கருத்தும் அனைவரும் ஏற்கத்தக்க பொருத்தமான இடமும் முடிவாகும் வரை, தற்போது பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் எவ்விதப் பணிகளையும் தொடங்கக் கூடாது. இது போன்ற விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவது அவசியம்” என்றார். முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி மீனவ அமைப்புகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

புதிய தலைமைச்செயலகம்

தமிழக அரசின் புதிய தலைமைச்செயலக கட்டிடம் சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், மீனவ அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடலும், கடல் சார்ந்த நெய்தல் இடமான அந்த இடத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டினால் அது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு பூதாகரமாக கிளம்பியுள்ளது. இது சம்பந்த மாக போராட்டக்களத்துக்கு செல்லவும் மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன. ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவு இருந்தும், அரசு பட்டினப்பாக்கத்தை குறி வைத்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மீனவ அமைப்புகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

SCROLL FOR NEXT