வேலூர்,
வேலூர் கிரீன் சர்கிள் பகுதியில் புதிய சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதை ஒட்டி, இன்று முதல் முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்ற விவரங்கள் பின்வருமாறு:
1. பெங்களூரு நோக்கிச் செல்லும் வாகனங்கள்.
காட்பாடி மற்றும் சத்துவாச்சாரி சாலைகளில் இருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் வாகனங்கள், கிரீன் சர்கிள் பகுதியிலிருந்து நேரடியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலைக்குள் செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் நேஷனல் தியேட்டர் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி அதன் பின்னர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக தங்களது பயணத்தைத் தொடரலாம்.
2. சித்தூர் மற்றும் காட்பாடி நோக்கிச் செல்லும் வாகனங்கள்.
சென்னை மற்றும் சத்துவாச்சாரி பகுதிகளில் இருந்து சித்தூர் மற்றும் காட்பாடி நோக்கிச் செல்லும் வாகனங்கள், கிரீன் சர்கிளிலிருந்து நேரடியாக சித்தூர் சாலைக்கு செல்ல கூடாது. அதற்கு பதிலாக, நேஷனல் தியேட்டர் சந்திப்பு வரை நேராக சென்று, அங்கிருந்து யூ-டர்ன் (U-Turn) எடுத்து மீண்டும் கிரீன் சர்கிளை அடைய வேண்டும். பின்னர் இடதுபுறமாகத் திரும்பி வழக்கமான சாலை வழியாகச் செல்லலாம்.
3. சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள்.
பழைய பேருந்து நிலையம் (சி.எம்.சி அவுட்கேட் வழியாக) மற்றும் பழைய பைபாஸ் சாலை ஆகிய இருவேறு வழிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள், நேஷனல் தியேட்டர் சந்திப்பை கடந்து வலதுபுறமாக திரும்ப வேண்டும். பின்னர் கிரீன் சர்கிளை அடைந்து, நேரடியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலைக்கு செல்லாமல், இடதுபுறமாக திரும்பி, அடுத்து வரும் வலதுபுற யூ-டர்னில் (U-Turn) திரும்பி தங்களது பயணத்தை தொடர வேண்டும்.
இன்று முதல் இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த தற்காலிக மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.