சென்னை,
தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் அதிக மழைபொழிவு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (அக்.,27) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். இதர தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (அக்.,28) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (அக்., 29) கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், இதர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்., 30 அன்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மெற்கு வங்கக் கடல் பகுதிகளில் 27.10.2021 மற்றும் 28.10.2021 தேதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
29.10.2021 முதல் 31.10.2021 வரை மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
30.10.2021 மற்றும் 31.10.2021 தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.