தென்காசி,
தென்காசி மங்கம்மாள் சாலை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி வீரமணிகண்டன் (33 வயது). இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளி. இவரது மனைவி அன்னலட்சுமி (23 வயது). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான முதல் வாரத்தில் இருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அன்னலட்சுமி தென்காசி அனைத்து மகளிர் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரை வழங்கியும் பிரச்சினை தீரவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சக்தி வீரமணிகண்டன், அரிவாளால் அன்னலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் உடலில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தப்பியோடிய சக்தி வீரமணிகண்டன் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அன்னலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.