தமிழக செய்திகள்

நீலகிரி: அங்கன்வாடி மையத்தை சூறையாடிய கரடி - மக்கள் அச்சம்

ஊருக்குள் வரும் கரடிகள் கடைகள் மற்றும் அங்கன்வாடிகளில் முட்டைகளை தேடி சாப்பிடுகின்றன.

நீலகிரி,

ஊட்டி அருகே அதிகரட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை கரடி சேதப்படுத்தி சென்றதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

கரடி அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் சமீப காலமாக கரடி, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட் டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் கரடிகள் கடைகள் மற்றும் அங்கன்வாடிகளில் முட்டைகளை தேடி சாப்பிடுகின்றன. இதற்கு அடிமையாகி விட்ட கரடிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊரை ஒட்டிய பகுதிக்குள் பதுங்கிக் கொள்கின்றன. இதனால் அவ்வப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஊட்டி அருகே அதிகரட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று உணவு தேடி அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்குள் புகுந்தது.

பெற்றோர் அச்சம்

அங்குள்ள அங்கன்வாடி மைய கதவை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள உணவு பொருட்களை எடுத்து கீழே கொட்டி சாப்பிட்டது. பின்னர் சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து வெளியேறி உள்ளது. இதனிடையே நேற்று காலை பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்து பார்த்த போது கரடி சேதப்படுத்தி இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். அதிகரட்டி பகுதியில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அதிகரட்டி பகுதியை சுற்றி தேயிலை தோட்டங்கள் அதிக அளவு இருப்பதால் ஏற்கனவே கரடி நட மாட்டம் அதிகரித்துள்ளது. தினசரி தோட்டங்களுக்கு மட்டும் வந்த கரடிகள் தற்போது அங்கன்வாடிக்கு வந்து விட்டது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பயமாக இருக்கிறது. இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் உலா வரும் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.