தமிழக செய்திகள்

நீலகிரி: கூண்டில் சிக்கியது ஆட்கொல்லி புலியா..? வனத்துறையினர் ஆய்வு

கூடலூர் அருகே ஓவேலி லாரிஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 பேரை புலி தாக்கிக் கொன்றது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி ஒன்று சிக்கி உள்ளது.

3 அதிநவீன டிரோன்கள்

கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரை கடந்த மாதம் 9-ந் தேதியும், ரவிச்சந்திரனை 21-ந் தேதியும் அடுத்தடுத்து புலி ஒன்று கடித்து கொன்றது. இந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து லாரஸ்டன், கெவிப்பாரா, பாரம், கோக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 70-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் களத்தில் இறங்கி புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இரவு, பகல் என எந்த நேரத்திலும் செயல்படக்கூடிய 3 அதிநவீன டிரோன்களை கொண்டு நிலப்பரப்பில் புலி எந்த இடத்தில் பதுங்கி உள்ளது என தேடும் பணியும் நடைபெற்று வந்தது.

போக்கு காட்டிய புலி

மேலும் 70-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் புலியின் வழித்தடங்களாக கருதப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதனிடையே கன்றுக்குட்டி, ஆடுகள் கட்டப்பட்ட 13 இரும்பு கூண்டுகளையும் வனத்துறையினர் பல இடங்களில் வைத்து கண்காணித்து வந்தனர். 2 கும்கி யானைகள் மீது அமர்ந்தும் தேடும் பணி நடந்து வந்தது. ஆனால், வனத்துறையினருக்கு போக்கு காட்டும் வகையில் புலி பிடிபடாமல் தப்பி வந்தது.

இதனால் முதுமலை, கூடலூர், நீலகிரி கோட்டம், கோவை, மதுரை, தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதலாக வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு கூடலூர் பகுதியில் புலியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது சில இடங்களில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சமதள நிலப்பரப்பில் புலி வராமல் அடர்ந்த புதர்களுக்குள் பதுங்கியதால் வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

தொழிலாளர்கள் பாதிப்பு

இருப்பினும், இரவு நேரத்தில் புலி இரையை தேடி வரலாம் என்ற கோணத்தில் இரவிலும் படம் பிடிக்கும் (நைட் விஷன்) டிரோன்கள் மூலம் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால், மழை மற்றும் கடும் பனிமூட்டம் உள்பட மோசமான காலநிலையால் புலி இடம் பெயர்ந்தவாறு உள்ளது. இதனிடையே புலி அச்சுறுத்தல் காரணமாக தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு வாகனத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் வனத்துறையினர் அழைத்து சென்று வருகின்றனர். மேலும் தோட்ட வேலைக்கு செல்லாததால் பொருளாதார ரீதி யாக தொழிலாளர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் வனத்துறையினர் நடுவட்டம், சிங்காரா, கார்குடி வனப்பகுதிக்கு புலி இடம்பெயர்ந்து இருக்கலாம் என கருதினர்.

சிக்கிய புலி

இதைத்தொடர்ந்து முதுமலை எல்லையோர பகுதிகளில் தானியங்கி கேமராக் கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. மொத்தம் 244 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. நேற்றுடன் (17.9.2026) 28 நாட்கள் ஆகியும் புலி வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தது.அதே நேரத்தில் புலி சிக்காததால் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கிலியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி ஒன்று சிக்கி உள்ளது. வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் 28 நாட்களுக்குப் பின்னர் புலி சிக்கி உள்ளது. அது 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியா என வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT