தமிழக செய்திகள்

நீலகிரி: புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தண்ணீர் குழாயை சீரமைக்க தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 63. இவர் நேற்று, தண்ணீர் குழாயை சீரமைக்க தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்கு சென்றார். ஆனால் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. உடனடியாக அப்பகுதியினர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த வன ஊழியர்கள் மற்றும் அப்பகுதியினர் இன்று காலை பாலகிருஷ்ணனை தேடி வந்தனர். அப்போது அவர் உடலில் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. புலி தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.