தமிழக செய்திகள்

நீலகிரி: காதலை கைவிட மறுத்த வாலிபர் குத்திக்கொலை- இளம்பெண்ணின் தந்தை, சகோதரன் வெறிச்செயல்

குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகளை வாலிபர் ஒருவர் காதலித்து வந்த நிலையில், தனது மகளை காதலிப்பதை கைவிடுமாறு அந்த வாலிபரிடம் ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கக்கன்நகர் பகுதியை சேர்ந்தவர் வினி ஆண்டோ (வயது 22), ஆட்டோ டிரைவர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(47). இவரும் ஆட்டோ டிரைவர். இதற்கிடையே ரவிச்சந்திரனின் மகளை வினி ஆண்டோ காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த ரவிச்சந்திரன், வினி ஆண்டோவை கண்டித்து மகளை காதலிப்பதை கைவிடுமாறு கூறி வந்துள்ளார். இதனை வினி ஆண்டோ ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வினி ஆண்டோவுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரவிச்சந்திரனின் மகனான 17 வயது சிறுவனும் உடன் இருந்தான்.

தொடர்ந்து நடந்த தகராறில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகனான சிறுவனும் சேர்ந்து கத்தியை எடுத்து வினி ஆண்டோவை குத்தினர். இதில் பலத்த காயமடைந்த வினி ஆண்டோ நிலை குலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே வினி ஆண்டோ பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அருவங்காடு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து, காதல் விவகாரத்தில் வினி ஆண்டோவை கத்தியால் குத்திக்கொன்ற ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகனான சிறுவனையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.