தமிழக செய்திகள்

மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் தலைமை மீது திமுக அதிருப்தி

இந்த முறை ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சி முன்வைத்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சி முன்வைத்து வருகிறது.

சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, கனிமொழி எம்.பி. சந்தித்து பேசியபோது, "ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், உள்ளாட்சியில் 20 சதவீத இடம்" என அடுக்கடுக்கான கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

திமுக மறுப்பு

'ஆட்சியில் பங்கு' என்று காங்கிரஸ் கட்சியினர் பேசத் தொடங்கியபோதே, திமுக தலைமை அதற்கு மறுப்பு தெரிவித்தது. 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் நாங்கள் இதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதி மணி உள்ளிட்டோர் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுகவுக்கு எதிரான கருத்து

மேலும், கூட்டத்தில் பேசிய பல நிர்வாகிகள் திமுகவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனால், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் இதுபோன்ற நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த திமுக தலைமை உடனடியாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தொடர்பு கொண்டு, "பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்" என்று கடிந்து கொண்டாதாக தெரிகிறது.

நடவடிக்கை இல்லை

செல்வப்பெருந்தகையும் உடனடியாக பெங்களூருவுக்கு சென்று, அங்கு வந்திருந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து முறையிட்டார். ஆனால், இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராகுல்காந்தியின் ஆலோசனையின் பேரில்தான் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை முகப்பேரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், "கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

ஆனால், இன்று காலை சமூக வலைதளத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி., பாரதியார் கவிதையை வெளியிட்டு, அதில் வரும் "வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்ற வார்த்தையை கோடிட்டு காட்டியிருந்தார்.

ஏற்கனவே நேற்று "அச்சமில்லை.. அச்சமில்லை.." என்று கருத்து பதிவிட்டு இருந்த மாணிக்கம் தாகூர், தொடர்ந்து திமுகவுக்கு எதிரான கருத்துகளை கூறிவருகிறார். தவெகவுடன் கூட்டணி சேரவும் கட்சி தலைமையை வலியுறுத்தி வருகிறார்.

திமுக தலைமை அதிருப்தி

ஆனால், இதுவரை மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் திமுக தலைமை அதிருப்தியில் உள்ளது. இதனால், 22-ந் தேதி தொடங்கும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியை அழைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.