தமிழக செய்திகள்

இனி கோவில்களில் நெடுநேரம் காத்திருக்க வேண்டாம்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் அதிரடி திட்டம்

ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

சென்னை,

திருவண்ணாமலைக்கு ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் சில கும்பல் ஈடுபடுவதாக இந்து சமய அறநிலையத்துறையின் கவனத்திற்கு சென்றது. இந்நிலையில், ஆந்திராவில் இருந்து வந்த பக்தர்களிடம் சிறப்பு தரிசனம் மூலம் விரைவாக சாமி பார்க்க அழைத்துச் செல்வதாக கூறி மர்ம நபர் மோசடியில் ஈடுபட முயற்சித்துள்ளார்.

கோவில் நிர்வாகத்தினர் இதை கண்டறிந்து விசாரித்த போது அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினார். சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் முறையை கட்டாயமாக்க அறநிலையத்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்ட நெரிசல், விரைவு தரிசன மோசடி உள்ளிட்டவற்றை தவிர்க்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற திட்டத்தை அமல்படுத்த அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

பண்டிகை நாட்கள், மற்றும் முக்கியமான விஷேஷ நாட்களிலும் இந்த நடைமுறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்கள் இனி கோவில்களில் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாது.