தமிழக செய்திகள்

விருப்ப மனு - நேரில் வர வேண்டாம் - என்.ஆனந்த் அறிவிப்பு

தவெக விருப்பமனு அளிக்க பொதுத் தொகுதிக்கு ரூ.10,000, தனித் தொகுதிக்கு ரூ.5,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தவெக விருப்ப மனு பெற யாரும் நேரில் வரவேண்டாம் என என்.ஆனந்த் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு நேற்று (பிப்.6) முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் நிலையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கழகத் தோழர்களுக்கு வணக்கம்.

வெற்றித் தலைவர் அவர்களின் ஆசியோடும் ஆதரவோடும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கழகத் தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே, மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட நம் வெற்றித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காகக் கழகத் தோழர்கள் யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, விருப்ப மனு பெற விரும்பும் கழகத் தோழர்கள், பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. https://drive.google.com/file/d/1Y9PfGCXvzVTbJ6B6S128PKJZE7laWgiK

இந்த இணைப்பின் வாயிலாக விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர் / தபால் மூலமோ அனுப்பலாம் என்று கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி கேட்டுகொள்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார்.

தவெக விருப்பமனு அளிக்க பொதுத் தொகுதிக்கு ரூ.10,000, தனித் தொகுதிக்கு ரூ.5,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.